4 செப்., 2009

பெத்ரா (Phedre)

காதல் தேவதையின் கடுஞ்சாபம்

'மனிதர்கள் மூன்று விஷயங்களுக்காக (ஒருவரையொருவர்) கொலைசெய்கிறார்கள்: நிலம், பொன், மாது ஆகியவைதான் அந்த மூன்றும்' --பஞ்சாபிய பழமொழி.

பெத்ரா ஏதென்ஸ் மன்னன் தீஸியஸின் பட்டத்து ராணி. தேசாந்தரம் சென்ற மன்னன் நீண்ட நாளாக (ஆறு மாதங்கள்) நாடு திரும்பவில்லை. அவன் இறந்து விட்டதாகவும் பேச்சு அடிபடத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் மகாராணி பெத்ராவுக்கு தனது கணவனின் மூத்த மனைவியின் மகன் மீது காதல் ஏற்படுகிறது. தனது சொந்த மகனது வாரிசு உரிமைக்கு போட்டியாக இருப்பதாக நினைத்து இத்தனை காலமும் வெறுத்த ஒருவன் மீதும், அதே சமயம் தனது மகனுக்கு சமமான ஒருவன் மீதும் பிறந்து விட்டநியாயம் தவறிய காதலால் ஏற்படும் மன உழைச்சலால் அவதிப் படுகிறாள் பெத்ரா. தனது நெருங்கிய சேவகியிடம் தனது மனக் கஷ்டத்தையும் உடல் அவதியையும் சொல்லிப் புலம்புகிறாள் பெத்ரா.(எனது ஒவ்வொரு அங்கமும் தீயால் பற்றியெரிகிறது. கண்கள் இருட்டுகின்றன. நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடுகின்றன.. காதல் நோய் ஒரு புலியைப்போல் என்னை இறுகக் கட்டிக்கொண்டு விட்டது`)

தனதுயிர் எஜமானி படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தும் சேவகி இளவரசன் ஹிப்பொலைதஸிடமே அதனைத் தெரிவித்துவிடும்படி ஆலோசனை கூறுகிறாள். அதன்படி இளவரசனிடம் தன் மனதின் பிரச்சனையைத் தெரிவிக்கிறாள் பெத்ரா. இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் இளவரசன் அவள் தனது தந்தையின் மனைவி என்பதை நினைவூட்டுகிறான். தனது நிலையை உணரும் பெத்ரா அவனது வாளின் மூலம் தன்னைக் கொன்று விடும்படி மன்றாடுகிறாள். தனக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான கதியை நினைத்து கலங்குகிறாள்.`காதல் தேவதை என்னைக் கண்டு விட்டாள் என்பதை நான் உணர்ந்து விட்டேன்.- அவள் வெறுப்பவர்களின் வரிசையில் இறுதியாக.. அவளது எரிதழல் பொறியில் நான் வீழ்ந்து விட்டேன்` எனப் புலம்புகிறாள்.

இந்த நிலையில் மன்னன் நாடு திரும்புகிறான். தனது நிலை மன்னனுக்கு தெரிந்தால் தனக்கும் தனது மகனுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்தை சேவகி மூலம் உணர்ந்து கொள்ளும் பெத்ரா அவளது ஆலோசனைப்படி இளவரசன் தன்மீது மோகித்ததாக மன்னனிடம் சொல்கிறள். அதை நம்பிய மன்னன் இளவரசன் மீது தீராத கோபம் கொள்கிறான். மன்னன் தன்மீது கொண்ட கோபத்திற்கான உண்மைக் காரணத்தை அறிந்த இளவரசன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறான். பெத்ரா தனது மனசாட்சியின் உறுத்தலை தாங்கிக் கொள்ள முடியாமல் மன்னனிடம் உண்மையைக் கூறிவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொகிறாள்.

கிரேக்க துன்பியல் நாடகமான பெத்ரா, பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நடகாசிரியரான ழான் ராஸினால் (Jean Racine) மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் வடிவம் அண்மையில் லண்டனில் மேடையேற்றப் பட்டது. இரண்டு மணி நேரமாக நடைபெறும் நாடகத்தில் காதலுக்கும் மனசாட்சிக்கும் இடையில் அகப்பட்டு அல்லலுறும் மகராணி பெத்ராவாக நடித்தவர் தி குயீன் (The Queen) படத்தில் எலிஸபெத் மகராணியை எம் கண்முன்னால் கொ|ண்டு வந்து நிறுத்தி அதற்காக ஒஸ்கார் விருது பெற்ற ஹெலன் மிர்ரென் (Helen Mirren).. நடுத்தர வயது தாண்டிய நிலையில் ஏற்படும் சபலத்தால் அலைக்கழிக்கப் படும் நிலையையும் அதனால் மகாரணியான தனக்கு ஏற்படக்கூடிய களங்கத்தை நினைத்து கலங்குவதையும் அவர் வெளிப்படுத்தும் விதம் எவர் மனதிலும் இரக்கத்தையும் கண்களில் கண்ணீரையும் நிச்சயம் வரவழைக்கும். ஏனைய நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும், ஹெலன் மிர்ரென் அரங்கில் நிறைய கைதட்டலை பெற்றார். நாடகத்தின் வெற்றிக்கு வசனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகத்தை பார்த்த போது முழுமையாக உணரக் கூடியதாக இருந்தது.

இந்த நாடகத்தின் ஆங்கில விமர்சனங்களைப் படிக்க விரும்புவோர் பின்வரும் இணைப்புக்களை அழுத்துங்கள்:

http://www.guardian.co.uk/stage/2009/jun/12/phedre-theatre-review

http://www.newstatesman.com/theatre/2009/06/love-racine-hughes-phedre

http://www.independent.co.uk/arts-entertainment/theatre-dance/reviews/phedre-national-theatre-london-1705125.html

9 ஆக., 2009

மைக்கல்

மைக்கல் ஜாக்ஸனின் பெயரை முதலில் கேட்டபோது அவரை இன்னொரு பாடகராகத் தான்- பத்தோடு பதினொன்றாக- காதலிக்காக ஏங்கும் அல்லது அவளது அழகைக் காமம் கலந்து விமர்சிக்கும் மேற்கத்தைய இளைஞனாகத் தான்-பார்க்கத் தோன்றியது. ஒரு காலகட்டத்தின் விடலைப் பருவத்தினர் அனைவரும் பால். நிறம் மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவரைத தமது ஆதர்ஸ நாயகனாக வரித்துக் கொண்டதை காண முடிந்தபோது என்னையும் அவரைப் பற்றி சிறிதளவான கவனம் எடுக்க வைத்தார். " கண்ணாடியில் தெரியும் மனிதனை" க கேள்வி கேட்கும் அவரது பாடலை முதன் முதலாகக் கேட்டபோது மைக்கல் மீது பாசம் ஏற்படத் தொடங்கியது. நிறபேதம், போரின் கொடுமைகள், பிராணி வதை மற்றும் சூழ்ல் மாசடைதல் என அவர் தனது பாடல்களின் ஊடாக இளம் சந்ததிக்கு பல விஷயங்களை சொன்னார். பாப் இசையில் நடனத்தை அவர் புதிய எல்லைகளுக்குக் கொண்டு சென்றார். விடியோ யுகத்தின் வருகையுடன் அவர் மேற்கத்தைய பாப் இசையின் அதியுச்சத்திற்கே சென்றார். அவரது கால்கள் நடனமாடின என்று சொல்வதை விட நடனத்தைக் காவியமாக்கின என்றால் அது மிகையில்லை. பத்து வயதில் பாடத் தொடங்கிய மைக்கல் இறுதியாக ஒரு நாள் தனது மேடைப் பேச்சொன்றில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெவிக்கையில் யாரும் அவரது பேச்சை ஸிரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின்பு அவரது ஓயாமல் ஆடிய உடலுக்கும அன்பைத் தேடிய உள்ளத்திற்கும் பெரும் ஒய்வு தேவைப் பட்டது. ஆனால் ஒரு கறுப்பு இளைஞனின் அபரிமிதமான வெற்றியை வெள்ளை அமெரிக்காவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது கைகளிலிருந்த அதிகாரத்தின் மூலம் யார் பலசாலி என்று நிரூபிப்பதிலேயே குறியாயிருந்தனர். மைக்கல் தனித்துப போரிட முடியாமல் தோற்றுப் போனது ஒன்றும் வியப்பல்ல. அவர் மீது சுமத்தப்பட்ட சிறுபிள்ளைதனமான குற்ற சாட்டுக்கள் வெள்ளை அமெரிக்காவின் கொடூர முகத்தை காட்டியது மட்டுமன்றி அவரையும் பெரிதும் பாதித்தது. தன்னை சுவர்களுக்குள் ஒடுக்கிக் கொண்ட மைக்கல் அன்புக்கும் ஆதரவுக்கும் பெருமளவில் ஏங்கியவர். குழந்தைகளை மகிழ்விக்க எதையும் செய்யத் தயாராக இருந்த மைக்கல் அவர்களது சிரிப்பில் பேருவகை கொண்டார். என்றுமே இறவாமல் வாழ விரும்பிய மைக்கல் ஒரு தலைமுறையின் கனவுகளில் நீங்காமல் நிறைந்து நின்றார். மைக்கல் நிச்சயமாக ஒரு யுக புருஷர். மைக்கல் ஜாக்சன் பற்றி தமிழில் வெளிவந்த கட்டுரைகளில் குறிப்பிடக் கூடிய ஒரு கட்டுரை காலச்சுவடு இதழில் வெளிவந்தது. கட்டுரையைப் படிக்க விரும்பும் அன்பர்கள் கீழுள்ள இணைப்பை அழுத்தவும் :
ஆங்கிலத்தில் வெளிவந்த நல்ல கட்டுரையொன்றைப் படிக்கப பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://www.nybooks.com/articles/௨௨௯௫௧ படம்: கார்டியன்(லண்டன்)

24 ஜன., 2009

இசையின் புயல்

"சொட்டு நீலம் டோய்..." என்ற அந்த ஒரு நிமிடதி்ற்கும் குறைவாக ஒலித்த விளம்பரப் பாடல், கேட்டபடி நடந்து செல்வோர் அனைவரையும் வயது வேறுபாடின்றி ஒரு கணம் நிற்கவைத்தது. அது நடந்து இன்று இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கலாம். அன்று தமிழ் நாட்டு மக்களை நிற்க வைத்தவர், அறுபது கோடி இந்தியரையும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் எண்ணற்ற இசை ரசிகர்களையும் நிற்க வைக்கும் நிலைக்கு வந்து விட்டார். தமிழ் நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் அவர் எட்டிய உயரம் சாமானியமானதல்ல. .இத்தனைக்கும் நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்று அடங்கிக் கொள்ளும் பண்பு அவரது ஆளுமையின் அழகு. எத்தனை , பரிசுகள் பட்டங்கள் தேடிவந்தாலும் , என் கடன் இசை அமைப்பதே என்றவாறான தோற்றம்.. தமிழ் மக்களின் ஆசிகளால் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இசையால் உலகின் காயங்களை ஆற்ற வேண்டும்.

15 ஜன., 2009

Slumdog Millionaire

எனக்கு நிறைய இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர் தமிழ் நாட்டிலும் பலர் அதற்கு வெளியேயும் பிறந்தவர்கள். அனைவருமே கடின உழைப்பும், சுய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும் கொண்டவர்கள். பிரகாசமான ஒரு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்காலம் தரும் மன, உடல் கஷ்டங்களை மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள். பரஸ்பர மரியாதையுடன் பழகக்கூடியவர்கள். பல நண்பர்கள் தீவிரமான அறிவுத்தேடலும் சமுக மாற்றத்தில் கடுமையான அக்கறையும் உண்மையாகவே மனசில் நிரம்பப் பெற்றவர்கள். . "ஏழைக்கு சோறிடாத சமயம் பக்தனுக்கு மோட்சத்தை தர முடியாது" என்று சூழுரைத்த விவேகானந்தரையும், வினோபா பாவேவையும், மஹாத்மா காந்தியையும், ஜெயப்பிரகாஷ் நாராயணையும் தந்த நாடு இந்தியா. உலகம் வியத்த விஞ்ஞானிகளையும், தத்துவ ஞானிகளையும் புரட்சியாளர்களையும் அது தோற்றுவித்தது. அந்த மண் தந்த மகான்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மாளாது. படம் பார்த்து வெளியே வந்தபோது இந்திய அரசியல்வாதிகள் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் எனது இந்திய நண்பர்கள் மீதும் எனக்கு ஏற்பட்ட கோபத்தையும், அதன் விளைவாக வந்த அழுகையையும் அடக்க முடியவில்லை.. ஏழை இந்தியனாய் பிறந்தால் ஏன் இத்தனை அவலம்? மாற்றுவோர் இங்கே இல்லையா?